Thursday, March 3, 2011

தேர்தல் கமிஷனின் அதிரடி

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அவை குறித்த விவரம்:

- கோவில், மசூதி, ஆலயங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது.

- ஜாதி, மதத்தை தூண்டும் வகையில் பிரசாரம் செய்யக் கூடாது.

- பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரசார சுற்றுப்பயணங்கள், ஊர்வலங்கள் அனைத்துக்கும் போலீஸ் முன் அனுமதி பெறவேண்டும்.

- தேர்தல் பிரசாரத்தின்போது கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் யாரேனும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தினால், அதற்கான செலவுக் கணக்கை வேட்பாளர்களின் பெயரில்தான் ஏற்றப்படும்.

- ஒவ்வொரு கட்சியும் தங்களது கட்சியின் நட்சத்திப் பிரசாரகர்கள் யார் என்பதை ஒரு வாரத்திற்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் பிரசாரகர்களின் பயணச் செலவுகள், வேட்பாளர் கணக்கில் வராது.

- பொது இடங்களில் சுவர் விளம்பரம் செய்யக் கூடாது. தனியார் இடங்களில் சுவர்களின் அனுமதி பெற்ற பிறகே தேர்தல் விளம்பரம் செய்யவேண்டும்.



- விளம்பர செலவுகள் அனைத்தும் வேட்பாளர் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.

- அரசியல் பொதுக் கூட்டங்கள், பிரசாரங்கள், சுவர் விளம்பரங்கள், ஊர்வலங்கள், பேனர்கள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும். இதற்கான செலவுகள் கணக்கிடப்பட்டு வேட்பாளர் செலவில் சேர்க்கப்படும்.

- தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் கார், வேன், பஸ் ஆகியவற்றின் வாடகை எவ்வளவு என்பதை கலெக்டர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்து அந்த தொகை தேர்தல் செலவில் சேர்க்கப்படும்.

- தேர்தலில் முறைகேட்டை கண்காணிக்க பறக்கும்படை அமைக்கப்படும். இதில் ஒரு துணை தாசில்தார், ஒரு போலீஸ் அதிகாரி, 4 போலீசார், ஒரு வீடியோ கிராபர் இடம் பெறுவார். இவர்கள் தவிர ஒவ்வொரு தொகுதியிலும் 4 அல்லது 5 சோதனை மையம் அமைக்கப்படும். இந்த மையங்கள் அடிக்கடி இடமாற்றப்படும்.

- ஒவ்வொரு மாவட்டத்திலும் வருமான வரித்துறை சார்பில் வருமான வரி உதவி இயக்குனர் நியமிக்கப்படுவார். அவர் மூலம் வேட்பாளருக்கு வரும் பணம் ஆய்வு செய்யப்படும்.

- வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யும்போது 3 வாகனங்கள் மட்டுமே வேட்பு மனுதாக்கல் அலுவலகம் அருகே 100 மீட்டர் வரை அனுமதிக்கப்படும். வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்யும் இடத்துக்கு செல்லலாம். அனுமதி பெறாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

- தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சொத்து விவரம், வழக்கு விவரம் ஆகிய 2 வகை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். சொத்துக்கள் விவரங்களை மொத்தமாக குறிப்பிடாமல் தனித்தனியாக குறிப்பிடவேண்டும். அந்த சொத்து யாரிடம் வாங்கியது? அது என்ன சொத்து? வாங்கிய போது மதிப்பு என்ன? இப்போது மதிப்பு என்ன? அதில் முதலீடு செய்த தொகை என்ன? போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். இதுதவிர அவரது குடும்பத்தில் உள்ள வாரிசு தாரர்கள் சொத்து கணக்கு காட்டவேண்டும்.

- கல்யாண மண்டபங்கள் கண்காணிக்கப்படும். அதில் என்ன விழா நடக்கிறது? எதற்காக வாடகைக்கு விடப்பட்டுள்ளது? என்பது பற்றி கண்காணிக்கப்படும்.

- மொத்தமாக எஸ்.எம்.எஸ். மூலம் விளம்பரம் செய்யவும் அனுமதி பெற வேண்டும். இது செலவு கணக்கில் சேர்க்கப்படும்.

No comments: