Thursday, March 3, 2011

சென்னையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் தேர்தல் ஆணையம் கூட்டுகிறது

சென்னை: சட்டசபைத் தேர்தல் தொடர்பாக தமிழக கட்சிகளுடன் இன்று மாலை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தல்நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன. இவை குறித்து அரசியல் கட்சிகளிடம் விளக்கி அவற்றை முறையாக கடைப்பிடிப்பது குறித்து கட்சிகளிடம் நேரடியாக விளக்க திட்டமிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

இதற்காக இன்று மாலை 5.30 மணிக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாமக, பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகிய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இக்கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும் தேர்தலின்போது கடைப்பிடிக்க வேண்டியவை குறித்தும் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் விளக்குவார்.

இந்த சந்திப்பின்போது தேர்தல் தேதி குறித்து அதிருப்தி அடைந்துள்ள கட்சிகள் அவற்றை தெரிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் எக்காரணம் கொண்டும் தேர்தல் தேதி மாற்றி அமைக்கப்படாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: