Thursday, March 3, 2011

சென்செக்ஸ்' புள்ளிகள் அதிகரித்தது.

நாட்டின் பங்கு வியாபாரம் வியாழக்கிழமை அன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' வர்த்தகம் முடியும்போது 43 புள்ளிகள் அதிகரித்தது.

காலையில் பங்கு வியாபாரம் தொடங்கியதும் பல துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததையடுத்து `சென்செக்ஸ்' 193 புள்ளிகளை இழந்திருந்தது. மத்திய பட்ஜெட்டில், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு குறைந்தபட்ச மாற்றுவரியை விதித்தது போன்ற பாதகமான அம்சங்கள் முதலீட்டாளர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் லிபியாவில் ஏற்பட்ட நெருக்கடிக்கு சுமூக தீர்வு ஏற்படும் என்ற செய்தி வெளியானதையடுத்து, சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை சற்று குறைந்தது. இதனையடுத்து இந்திய பங்குச் சந்தைகளில் மோட்டார் வாகனம், பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தது. பொறியியல் துறையைச் சேர்ந்த பீ.எச்.இ.எல். மற்றும் லார்சன் - டூப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை 3.5 சதவீதம் வரை உயர்ந்து இருந்தது.

மேலும் பிப்ரவரி 19-ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் உணவு பொருள் பணவீக்கம் 10.39 சதவீதமாக குறைந்துள்ளது என்ற புள்ளி விவரத்தை மத்திய அரசு வெளியிட்டது. இதனையடுத்து வங்கி, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இதுபோன்ற காரணங்களால் மதியத்திற்கு பிறகு `சென்செக்ஸ்' 157 புள்ளிகள் வரை உயர்ந்து இருந்தது.

இருப்பினும் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி மீண்டும் பங்குகளை விற்பனை செய்ததால், தகவல் தொழில்நுட்பம், உலோகம், மருந்து போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தது.

வர்த்தகம் முடியும்போது `சென்செக்ஸ்' 43.26 புள்ளிகள் மட்டும் அதிகரித்து 18,489.76 புள்ளிகளில் நிலைபெற்றது. அதிகபட்சமாக 18,603.57 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,253.62 புள்ளிகளுக்கும் சென்றது. `சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் 16 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `நிஃப்டி' 13.90 புள்ளிகள் உயர்ந்து 5,536.20 புள்ளிகளில் நிலை கொண்டது.

No comments: