Tuesday, March 15, 2011

விடுதலைப்புலி ஆதரவு பிரசாரம் குற்றம் ஆகாது; ஐகோர்ட்டு அபார தீர்ப்பு

கருத்துரிமை இயக்கம் சார்பில் புகழேந்தி தங்கராஜ் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். கடந்த அக்டோபர் மாதம் விடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்து இருந்தனர். பனகல் மாளிகை முன்பு இந்த இயக்கத்தை நடத்த போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் கமிஷனர் அனுமதி தர மறுத்து விட்டார்.

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. கமிஷனரின் உத்தரவை ரத்து செய்து கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சந்துரு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர் தனது தீர்ப்பில் கூறியதாவது:-

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதோ, பிரசாரம் செய்வதோ குற்றம் ஆகாது என்று வைகோ மீதான பொடா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. எனவே விடுதலைப்புலிகளின் தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துவது தவறு அல்ல. அரசியல் சட்டத்துக்கு எதிரானது அல்ல. இதனால் கமிஷனர் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறினார்.

No comments: