Thursday, March 3, 2011

தேர்தல் கமிஷன் மீது கருணாநிதி பாய்ச்சல்



சென்னை : "தேர்தல் கமிஷன் யாராலும் கேள்வி கேட்க முடியாத அமைப்பு என்றாலும், சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்' என கருணாநிதி தெரிவித்துள்ளார்.


இது குறித்த அவரது அறிக்கை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தல் பிரசாரம் செய்ய 17 நாட்கள் தான் உள்ளன. தேர்தல் நடைபெறும் நாள் ஏப்ரல் 13. ஓட்டு எண்ணிக்கை நடைபெறப் போவது மே 13. தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். மேற்குவங்கத்தில் தேர்தல் முடிந்த பின்தான் ஓட்டு எண்ணிக்கை நடைபெற வேண்டுமானால், அனைவரையும் சிரமப்படுத்தி ஏப்ரல் 13ம் தேதியே தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் என்ன?மே 13ம் தேதி ஓட்டு எண்ணப்பட்டாலும் முழு முடிவு 14ம் தேதி தான் தெரியும். தற்போதைய சட்டசபை முடிவுற்று அடுத்த சட்டசபை மே 17ம் தேதியே துவங்கப்பட வேண்டும்.தற்போதைய சட்டசபை மே 16ம் தேதியுடன் முடிகிறது. 14ம் தேதி முடிவு தெரிந்து, எந்த கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது என்பது முடிவாகி, அந்த கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கூட்டி, சட்டசபை கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.அவர் கவர்னரை சந்தித்து, கவர்னர் அமைச்சரவை அமைக்க சொல்லி கேட்டு, அதன் பின் அமைச்சர்கள் அறிவிக்கப்பட்டு, அந்த அமைச்சர்கள் கவர்னர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து புதிய சட்டசபையை மே 17ம் தேதிக்குள் கூட்டியாக வேண்டும். இதற்கு இரண்டே நாட்கள் தான் இருக்கின்றன. அதற்குள் இத்தனை பணிகளையும் முடிக்க முடியுமா? ஆனால் முடித்தாக வேண்டும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

மே 17ம் தேதியே புதிய சட்டசபை கூட்டப்பட வேண்டும் என்றால், எதற்காக அவசர, அவசரமாக ஏப்ரல் 13ம் தேதியே தேர்தலை நடத்த வேண்டும். மேலும் சில நாட்கள் அரசியல் கட்சிகளுக்கு அவகாசம் அளித்து ஏப்ரல் கடைசியிலோ, மே முதல் வாரத்திலோ அனைவரும் எதிர்பார்த்ததை போல தேர்தல் தேதியை அறிவித்திருக்கலாம். தேர்தல் கமிஷன் யாராலும் கேள்வி கேட்க முடியாத அமைப்பு என்றாலும், சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் அல்லவா?இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

----

அட இன்னும் எங்க தொகுதி பங்கீடு பிரச்சனையே முடியலை அதுக்குள்ள என்னய்யா அவசரம்?

No comments: